

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அவரது பேச்சில் மிசா காலத்தில் ஸ்டாலின் சிறையில் அடைக்கப்பட்டதையும் விமர்சித்த அவர், தனது தாடையில் கை வைத்து பேசியது, திமுகவினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பினை கொடுத்துள்ளது. முதல்வர் விஜய்யின் இந்த பேச்சுக்கு எதிராக அவரது கூட்டணி கட்சியை சார்ந்த கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த பிரச்சனையை கையில் எடுத்த திமுக, செப்டம்பர் 12 ஆம் தேதி தமிழகம் முழுக்க மாவட்ட தலைநகரங்களில் ,விஜயின் பேச்சிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் விஜய், "தனது சைகை எதார்த்தமாக நடைபெற்ற ஒரு விஷயம் என்றும் அதற்கு எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது ", என்று தனது x பக்கத்தில் விளக்கம் அளித்து இருந்தார். விஜயின் சட்டமன்ற பேச்சுக்கு, ஸ்டாலின் ஒரு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் அந்த வீடியோவில் "நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் நடைபெற்ற சில சர்ச்சைகள், தமிழ் மக்கள் மத்தியிலும் நம் உடன்பிறப்புகள் மத்தியிலும் கடுமையான கோபத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கியதை நான் உணர்கிறேன். இந்த சர்ச்சையில் எனது சிறை வரலாறும் இருப்பதால் நான் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மிசா சட்டத்தை எதிர்த்து அன்று கலைஞர் கருணாநிதி மெரினாவில் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தி காட்டினார். அதற்கு அடுத்த நாளே திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆட்சி கலைக்கப்பட்ட அடுத்த நாளே, என்னை சிறையில் அடைப்பதற்காக வீட்டிற்கு காவல் துறையினர் வந்தனர்". அப்போது கலைஞர், "என் மகன் பிரச்சாரத்திற்கு சென்றுள்ளான், அவன் வந்ததும் நானே போன் செய்கிறேன் , வந்து கைது செய்து கொள்ளுங்கள்," என்று கூறி அனுப்பினார். அடுத்த நாள் நான் வந்ததும் கலைஞர் காவல்துறையை அழைத்து, "என் மகன் வந்து விட்டான், கைது செய்து கொள்ளுங்கள்," என்று கூறினார்.
சிறைச்சாலையில் ஒரு சிறிய அறையில் தன்னை அடைக்கப்பட்டதையும் , அந்த அறை மிகவும் துர்நாற்றம் மிக்கதாகவும் இருந்ததை ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும் அந்த அறையில் தொழு நோயாளிகளும் சிலர் அடைக்கப்பட்டு இருந்தனர். இரவு நேரங்களில் தங்களை தூங்கவிடாமல் காவல்துறையினர் கடுமையாக அடித்து சித்திரவதை செய்தனர். பூட்ஸ் கால்களால் எங்களை மிதித்தனர். அந்த தாக்குதலில் என் அருமை அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிட்டிபாபு சிறையிலேயே உயிரிழந்தார்.
தம்பி விஜய் தாடையில் கை வைத்து சைகை காட்டியது போல, சிறையில் வாங்கிய அடியில் என் தாடை எலும்பு உடைந்தது உண்மைதான். அதன் தழும்பு இன்றும் என்னிடம் இருக்கிறது. போராளிகளுக்கு இது போன்ற தழும்புகள் ஏற்படுவது இயல்புதான். இது போன்ற போராட்டங்களை எல்லாம் உங்களின் கொள்கை தலைவரான அண்ணா காலத்தில் இருந்து திமுக பார்த்துள்ளது.சட்டமன்ற நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து திமுகவின் வரலாறை படிக்குமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் தொடர்ந்து ஸ்டாலின், " முதல்வராக பதவியேற்ற பிறகு என் வீட்டிற்கு வந்தபோது "பிரச்சாரத்தில் உங்களை விமர்சித்து பேசி விட்டேன் , சாரி சார் ", என்று நீங்கள் சொன்னபோது, ' பரவாயில்லை 'என்று நான் கூறினேன். நீங்கள் அதை மறந்து விட்டீர்கள், என்று ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வருக்கான கண்ணியமும் உடல் மொழியும் இருக்க வேண்டும். தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஸ்டாலின் அந்த வீடியோவில் விமர்சித்து இருந்தார்