
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக 95 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மருதுபாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைகள், வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு, வ.உ.சி.யின் மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டு உள்ளது. இந்த நிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைப்பெற்ற செய்தி மக்கள் தொடர்புத் துறை மானிய கோரிக்கையில் சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சென்னை காந்தி மண்டபத்தில் சிலைகள் நிறுவப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆன நிலையில் சிலைகளை நிறுவும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அதன் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் இருந்தன.
ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலை, ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலையும் மற்றும் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கினையும், அவரது மார்பளவுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் ரூ.1.47கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபத்தை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் திரு.வி.கே.பழனிசாமி கவுண்டர், பாரதரத்னா சி. சுப்பிரமணியம், பொள்ளாச்சி திரு.நா.மகாலிங்கம் ஆகியோருக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கம் & திருவுருவச்சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.
மேலும் சுதந்திரப்போராட்ட வீரர் தளி பாளையக்காரர், மலையாண்டி வெங்கிடுபதி, எத்தலப்பர் நாயக்கர் நினைவாக உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள உருவச்சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த. மோகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.