

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்க்கரை விலை சுமார் 16% வரை அதிகரித்துள்ளது. சில்லறை ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 67 வரை விற்கப்படுகிறது. பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு மற்றும் பதுக்கல் போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீர் விலை உயர்வுக்கு காரணங்களாக கூறப்படுவது கரும்பு உற்பத்தி குறைவு, ஆலைகளில் பதுக்கல் மற்றும் தட்டுப்பாடு, பண்டிகைக் காலத் தேவைகள், உலகளாவிய விநியோகத்தில் சிக்கல் போன்றவை இதற்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன. உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களில் கரும்பு உற்பத்தி எதிர்பார்த்ததை விடக் குறைந்துள்ளது.
அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் ரெட் ராட் டாப் போரர் போன்ற நோய்களால் கரும்புப் பயிர்கள் சேதம் அடைந்ததும் ஒரு காரணமாக கூறப்படுகின்றது.
அடுத்தடுத்து வரும் பண்டிகை நாட்களால் சர்க்கரைக்கான தேவை சந்தையில் கணிசமாக அதிகரித்து உள்ளது. ஆலை உரிமையாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சர்க்கரையை பதுக்குவதும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதும் ஒரு காரணம் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அத்துடன் சர்வதேச சந்தையிலும் சர்க்கரை விநியோகம் குறைந்துள்ளதால் உலகளாவிய ரீதியில் விலை அதிகரித்துள்ளது.
எத்தனால் உற்பத்திக்கு கரும்புச்சாறு திருப்பி விடப்படுவதால் தான் இந்த தட்டுப்பாடு என எழுந்த புகாரை மத்திய அரசு மறுத்துள்ளது. தற்போது எத்தனால் உற்பத்திக்கு பெரும்பாலும் சோளம் போன்ற தானியங்களே பயன்படுத்தப்படுவதாக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், சந்தையில் சர்க்கரை தட்டுப்பாட்டைப் போக்கவும் மத்திய அரசு சில அவசர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்காக அரசின் நடவடிக்கைகளாக அக்டோபர் 31க்குள் 10 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
மொத்த நுகர்வோர்கள் மற்றும் டீலர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சர்க்கரையை சேர்த்து வைக்கக் கூடாது என அக்டோபர் 31ஆம் தேதி வரை கையிருப்பு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. டீலர்கள் மற்றும் நுகர்வோருக்கு கையிருப்பு வரம்பு நிர்ணயம் மற்றும் விலையைக் கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சர்க்கரை ஆலைகள் மற்றும் வியாபாரிகளிடம் உள்ள சர்க்கரை இருப்பை அரசு அதிகாரிகள் நேரடியாகச் சென்று சரிபார்த்து வருகின்றனர்.
சர்க்கரை விலை உயர்வால் சில்லறை நுகர்வோர்கள் நேரடியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வணிக ரீதியாக பெரும் தேவை உள்ளதால் தேநீர்க் கடைகளில் டீ, காபி விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பேக்கரி பலகாரங்கள், இனிப்பு வகைகளின் விலையும் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அரசு இறக்குமதி மற்றும் பதுக்கல் தடுப்பு நடவடிக்கைகளால் வரும் நாட்களில் சர்க்கரையின் சில்லறை விலை படிப்படியாக குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கொசுறு செய்தியாக பீகாரில் சர்க்கரை விலை 65 ரூபாயைத் தாண்டி உள்ள நிலையில் விலை உயர்வைக் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அரசிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த சமயம் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்பு துறை அமைச்சர் ஷ்ரவண் குமார், "நாட்டில் அனைவருக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது. இன்றைக்கு யார் இனிப்பு சாப்பிடுகின்றனர்? மக்கள் சர்க்கரை சாப்பிடுவதை குறைத்து விட்டனர். எனவே சர்க்கரை விலை உயர்வால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. எனவே இது குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று பொறுப்பற்ற பதிலை அளித்துள்ளார்.