ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி மறுக்கக் கோரும் தமிழக அரசின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி மறுக்கக் கோரும் தமிழக அரசின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்!

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி ஊர்வலம் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, பேரணிக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பிரச்னைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை, அதற்காக பேரணியை தடுப்பது நியாயமல்ல என ஆர்எஸ்எஸ் தரப்பு வாதிட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 50 இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, பேரணி நடத்த தமிழ்நாடு அரசிடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோரிக்கை வைத்தது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு, அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாடுஅரசு அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததை எதிர்த்து உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 2 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ஆம் தேதி நிபந்தனையுடன் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்திகொள்ள சென்னை அனுமதி அளித்திருந்தது.

நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து இருந்தது. மேலும், தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு, நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதர 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது. இந்த 6 இடங்களில் பேரணி நடத்த 2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நிபந்தனையுடன் கூடிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, பிரச்னைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை, அதற்காக பேரணியை தடுப்பது நியாயமல்ல என ஆர்எஸ்எஸ் தரப்பு வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, பேரணிக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com