ராகுலுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி உள்ளிட்ட அனைவரின் பதவி உயர்வும் நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ராகுலுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி உள்ளிட்ட அனைவரின் பதவி உயர்வும் நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல்காந்தி, ‘‘எப்படி திருடர்கள் அனைவருக்கும் ‘மோடி’ என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பி பேசி இருந்தார்.

ராகுல்காந்தியின் இந்தப் பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு, சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கால அவகாசமும் அவருக்கு அளிக்கப்பட்டது. அதையடுத்து, தண்டனையை நிறுத்த வைக்கக்கோரி ராகுல்காந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ராகுல்காந்திக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மாவுக்கு செசன்ஸ் நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டதோடு, அவரோடு சேர்த்து 68 நீதித் துறை அதிகாரிகளுக்கும் பதவு உயர்வு வழங்கப்பட்டது.

இந்தப் பதவி உயர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கிய ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உள்ளிட்ட குஜராத்தின் கீழமை நீதிமன்ற நீதித்துறையைச் சேர்ந்த 68 பேரின் பதவி உயர்வை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

மேலும், அவர்கள் ஏற்கெனவே வகித்துவந்த பதவிகளுக்கே செல்ல வேண்டும் என்றும், பதவி உயர்வு என்பது தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து, பதவி உயர்வு அளித்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரை மற்றும் குஜராத் அரசு வெளியிட்ட அறிக்கை சட்டவிரோதமானது என்றும் அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com