

தமிழ்நாடு மின்சார விநியோக வாரியம் , புதிய மின்சார திருத்தம் 2024 விதி 23 ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க விரும்பினால், அதற்கான இழப்பீடு தொகையை முன்கூட்டியே, மின்சார வாரியங்களுக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும். அவ்வாறு இலவச மின்சாரத்தால் ஏற்படும் இழப்பை சரிகட்ட தவறினால் அது மின்சார வாரியத்தின் நிதி பற்றாக்குறையாக கருதப்படும்.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார விநியோக வாரியம் கோரிக்கை விடுத்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது நீதிபதிகள் , மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கும் இந்த போக்கு எப்போது மாறும்? இது போன்ற இலவச சலுகைகள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய அளவில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த இலவச திட்டங்கள் அனைத்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல, என்று நீதிமன்றம் காட்டமாக விமர்சித்துள்ளது.
இலவச திட்டங்கள் அனைத்தும் தேர்தலை முன்வைத்து மக்களுக்கு வழங்கப்படுகின்றன, இது சமீபத்தில் நடந்து முடிந்த சில மாநில தேர்தல்களில் பிரதிபலித்திருந்தது. மக்களுக்கு நேரடியாகவே அரசாங்கம் பணத்தினை வழங்கினால் , மக்கள் இனி எவ்வாறு வேலை செய்வார்கள்? இதனால் அவர்கள் முழு சோம்பேறிகளாக மாறி வேலைக்கு செல்ல மறுப்பார்கள்.
இலவச மின்சார திட்டங்களுக்கான கட்டணத்தை மாநில அரசை ஏற்றுக்கொள்வது பற்றி நீதிபதி கேள்வி எழுப்பினார். மக்களின் நலனுக்காக தான் அரசாங்கம் இந்த கட்டணங்களை செலுத்த முடிவு செய்ததா? இந்த கேள்வியை தமிழ்நாட்டை மட்டும் பார்த்து நாங்கள் எழுப்பவில்லை, இந்தியாவின் மற்றும் மாநிலங்களையும் சேர்த்துதான் இந்த கேள்விகளை எழுப்புகிறோம்.
மின் கட்டணம் செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லாதவர்களுக்கு அரசாங்கம் கட்டணம் செலுத்த முனையலாம் , ஆனால் , வருமானம் கொண்டவர்களுக்கும் சேர்த்தே அரசாங்கம் கட்டணம் செலுத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்? இது மக்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் செயலாக இருக்கிறது. நாடு முழுக்க நடைபெறும் இது போன்ற செயல்கள் எங்களை கலக்கத்திற்கு ஆளாக்கியுள்ளது. இன்று நீதிபதி சூரியகாந்த் கூறியுள்ளார்.
உங்கள் மாநிலம் உபரி வருவாய் கொண்ட மாநிலமாக இருந்தால் கூட , நீங்கள் சாலை வசதிகளை மேம்படுத்துதல், பள்ளிக்கூடத்தினை மேம்படுத்துதல், மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு அந்த பணத்தினை செலவு செய்வதுதான் கடமையாகும். ஆனால் நீங்களோ உணவு , உடை போன்ற விஷயங்களுக்காக பணத்தினை தேர்தல் நேரத்திற்காக செலவு செய்கிறீர்கள். இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? என்று சூரியகாந்த் கேள்வி எழுப்பினார்.
ஒதுக்கப்பட்டவர்களுக்கு நாட்டில் சலுகை கொடுப்பது பரவாயில்லை. ஆனால், வசதி உள்ளவர்களுக்கும் அந்த சலுகை கொடுப்பது எதற்காக? வசதி குறைவால் கல்வி பெற முடியாத சுழலில் சில குழந்தைகள் இருக்கிறார்கள் , திறமை இருந்தும் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல முடியாத மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் அரசாங்கம் உதவ வேண்டும். ஆனால் ,இந்த சலுகைகள் அனைத்தும் வசதி பெற்றவர்களுக்கே கிடைக்கிறது. அரசு நிறுவனங்களை எல்லாம் லாபத்தை ஈட்ட சொல்லவில்லை மாறாக அனுபவிப்பவர்களிடம் பணம் ஈட்ட தான் சொல்லுகிறோம். தேர்தலை முன்னிட்டு அனைத்து இலவச திட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன.
மக்களின் சுயமரியாதையை காப்பதற்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் . இலவச மின்சாரம் ,இலவச கேஸ் ,இலவச அடுப்பு , மாதாந்திர பணம் வழங்கும் திட்டம் போன்றவற்றால் மக்கள் எதற்காக வேலைக்கு செல்ல வேண்டும் ?என்று நினைப்பார்கள். அந்த இலவசங்களை இந்த மேடையில் அமர்ந்து கொண்டே நானும் பெற முடியும் என்றால், இந்த தேசத்தின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் பணியா இது? என்று தலைமை நீதிபதி விமர்சித்தார். இறுதியாக இலவசத் திட்டங்கள் தொடர்பாக மனுக்களை ஆராய்வதாகவும் கூறினார்.