தமிழகத்தில் 2.54 லட்சம் விபத்துகள் - திமுக அரசின் அலட்சியமே காரணம் - புள்ளி விவரங்களுடன் அடுக்கிய அண்ணாமலை..!

annamalai
annamalaisource:india today
Updated on

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு மாறி இருப்பது, பாராளுமன்றத்தில், மத்திய சாலைப் போகுவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2021 – 2024 நான்கு ஆண்டுகளில், 2,54,526 சாலை விபத்துகள் தமிழகத்தில் பதிவாகியிருக்கின்றன. நாட்டின் மற்ற எந்த மாநிலங்களிலும், இத்தனை விபத்துகள் ஏற்படவில்லை. தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாலை விபத்துக்களால், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 50 பேர் உயிரிழக்கின்றனர். தரமற்ற, சீர்குலைந்த சாலைகள் ஒரு காரணமாக இருந்தாலும், தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க, தெருவுக்குத் தெரு டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறந்து வைத்துள்ள திமுக அரசின் அலட்சியப்போக்கே இதற்கு முக்கியக் காரணம்.

கட்டுப்பாடற்ற மது மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையால் ஏற்படும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுவது, அப்பாவி பொதுமக்களே. ஆனால், திமுக அரசுக்கு மது விற்பனை மூலம் கிடைக்கும் பணமே முக்கியமாகத் தெரிகிறது. போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கவோ, சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்தவோ, பொதுமக்களின் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்யவோ இயலாத இந்த கையாலாகாத திமுக அரசு, விரைவில் தூக்கி எறியப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com