![‘தமிழகப் பெண்கள் பொருளாதார சுதந்திரத்தோடு விளங்குகிறார்கள்’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி!](http://media.assettype.com/kalkionline%2F2023-03%2Fb26703cc-ce20-4fd8-92bf-09ac96cf5587%2F1.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
வங்கிகளிலோ தனியார் நிறுவனங்களிலோ கடன் பெறும் பெண்கள் அதை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறித்து. 'சிஆர்ஐஎப் ஹை மார்க்' கடன் தரவு நிறுவனம் ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களே அதிகமாகக் கடன் பெறுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. வீட்டுக்கடன் பெறும் பெண்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்திலும் தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளன.
அதேபோல், வணிகக் கடன் பெறும் பெண்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளன. தனிநபர் கடன் பெறும் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் உள்ளன. கடன் வாங்கும் வசதியை மற்ற மாநிலங்களில் உள்ள பெண்களை விட, தென் மாநிலங்களில் உள்ள பெண்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்வதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்றைய தினம் நாளிதழ்களில் வெளிவந்துள்ள இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தலைப்பைப் பார்த்தால் எதிர்மறையாக இருக்கலாம். உண்மையில் அது நேர்மறையானதே. வீடு, வணிகம், சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில்முனைவுகளுக்காக கடன் வாங்கும் பட்டியலில் தமிழ்நாட்டுப் பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடன் பெறுவதில் முதலிடத்திலும் உள்ளனர் என்பதுதான் அந்தச் செய்தி. பெண்களின் சமூகப் பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம். அதிலும், தமிழ்நாட்டுப் பெண்கள் எந்தளவுக்குப் பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துவது, உலக மகளிர் தினத்தில் மகிழ்ச்சியான செய்தி’ என்று குறிப்பிட்டுள்ளார்.