

தமிழ்நாட்டின் உளவுத்துறை ஐ.ஜி மாற்றப்பட்டதற்கு திமுக தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டி.ஆர்.பாலு ஏற்கனவே உளவுத்துறை ஐஜி மாற்றம் செய்யப்பட்டது குறித்து கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது அது கண்டனமாக வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் உளவுத்துறை ஐ.ஜியாக பணியாற்றி வந்த செந்தில்வேல் சமீபத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவருக்கு பதிலாக அவினாஷ்குமாரை உளவுத்துறையின் ஐ.ஜியாக நியமித்து உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு ஏற்புடையதல்ல என்று திமுக கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளுக்கும் ஐ.ஜி மாற்றத்திற்கும் என்ன தொடர்பு என டி. ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய பணியிட மாற்றம் என்பது ஏற்க முடியாது என்ற கருத்தையும் முன் வைத்து அந்தக் கடிதத்தை தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு திமுக சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. உளவுத்துறை ஐஜி என்பது மிக முக்கியமான பொறுப்பாகும். தேர்தலுக்கும் அந்தப் பொறுப்பிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத நிலையில் அவரை மாற்றுவதற்கான அவசியம் என்ன வந்தது என்ற கேள்வியையும் அந்த கடிதத்தில் திமுக தரப்பில் எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.