பள்ளியின் ஒருநாள் தலைமை ஆசிரியை; மாணவி லோகிதா அசத்தல்!

மாணவி லோகிதா
மாணவி லோகிதா

 விழுப்புரம் திரு.வி.க வீதியில் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் தலைமை ஆசிரியையான சசிகலா, அப்பள்ளியில் காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு ஒரு அறிவிப்பு செய்தார்.

அதாவது, காலாண்டு தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று காத்திருப்பதாக அறிவித்தார்.

 இதையடுத்து சுமார் 4 ஆயிரம் மாணவிகள் படிக்கும் அப்பள்ளியில்  காலாண்டு தேர்வில் எஸ்.லோகிதா என்ற பிளஸ் 2 மாணவி  600க்கு 581 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். அதையடுத்து அப்பள்ளியில் 1 நாள் தலைமை ஆசிரியராக பதவி வகிக்கும் வாய்ப்பை லோகிதாவுக்கு தலைமை ஆசிரியர் சசிகலா கொடுத்தார்.

 தலைமை ஆசிரியர் இருக்கையில் லோகிதாவை அமர வைத்து அவருக்கு கிரீடம் சூட்டி அழகு பார்த்தனர். இதையடுத்து ஒருநாள் தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட லோகிதா, ஒவ்வொரு வகுப்பறையாக சென்று கண்காணித்தார்.

தொடர்ந்து, பள்ளியில் உள்ள சத்துணவு மையத்துக்கு சென்று மாணவிகளுக்கு வழங்க இருந்த மதிய உணவை சுவைத்து சோதனை மேற்கொண்டார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வகுப்பறைகளுக்கு செல்கின்றனரா என்று சரிபார்த்தார். அதோடு பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமை ஆசிரியைப் பணியை சிறப்பாக செய்து முடித்த மாணவி லோகிதாவுக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.

‘’எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கனவில்கூட நினைத்ததில்லை. இதுபோன்ற வாய்ப்பு மற்ற மாணவிகளையும் கூடுதல் மதிப்பெண்கள் பெற உந்துதலாக அமையும்’’ என்றார் லோகிதா.

 இதுபற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா கூறுகையில், ‘’மாணவிகள் கல்வியுடன், தனித்திறன்களையும், தலைமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள இதுபோன்ற பயிற்சிகள் உதவும் என்பதாலேயே இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதேபோல தொடர்ந்து வரும் தேர்வுகளில் முதலிடம் பிடிப்போருக்கும் சர்ப்ரைஸ் கிப்ட் காத்திருக்கிறது’’ என்றார்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com