சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 2,500 பேரிடம் உயர்த்தப்பட்ட அபராத தொகையாக, 15.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைகவசம் அணியாதது, சிக்னல் மதிக்காமல் சென்றது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 2,500 பேரிடமிருந்து, நேற்று முன்தினம் மட்டும் 15.50 லட்சம் ரூபாயை போக்குவரத்து காவல் துறை அபராதமாக வசூலித்து உள்ளனர்.
உயர்த்தப்பட்ட அபராத தொகை பன்மடங்கு இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாடு முழுதும், போக்குவரத்து விதிகளை மீறுவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கட்டுப்படுத்த, மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டது.
அதன்படி, போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை பன் மடங்கு உயர்த்தி , 2019ல் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த புதிய அபராத தொகையை, பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தின. ஆனால், தமிழக அரசு கடந்த 19ம் தேதி தான் இதுதொடர்பான அரசாணையை வெளியிட்டது. அதன்படி, சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு, உயர்த்தப்பட்ட அபராத தொகை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது, நேற்றும் போலீசார் அபராதம் விதித்தனர். புதிதாக உயர்த்தப்பட்ட அபராத தொகையில், தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டு வோருக்கு 1,000 ரூபாய், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்த வாகன ஓட்டிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணித்தவர்களுக்கு 1,000 ரூபாய், கார்களில் 'சீட் பெல்ட்' அணியா இருந்தவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பதிவெண் இல்லாமல் வாகன ஓட்டியவர்களுக்கு 2,500 ரூபாய், வாகனங்களில் தேவையற்ற மாற்றம் 2,500, வாகனம் செய்தவர்களுக்கு குடித்து விட்டு ஓட்டியவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.