
தமிழகத்தில் கடந்தாண்டு மே 7ம் தேதி முதல், சாதாரண அரசு பஸ்களில், 176.84 கோடி மகளிர் இலவச பயணத்தை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில், 2021 மே 7 முதல் சாதாரண மகளிரும், ஜூன் 3 முதல் திருநங்கையர், மாற்றுத்திறனாளிகளும் இலவச பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளின் துணைக்கு ஒருவர் உடன் பயணிக்கலாம். இலவச பயணம் செய்வோருக்கான மானியத்தை அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டதால், போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், ஜூலை 12 முதல் இலவச பயணத்திற்கான டிக்கெட் விநியோகம் துவங்கியது.
அதன்படி நேற்று முன்தினம் வரை 176.84 கோடி மகளிர், 10 லட்சம் திருநங்கையர், 1.29 கோடி மாற்றுத்திறனாளிகள், 6.55 லட்சம் மாற்றுத்திறனாளி உதவியாளர்கள் பயணித்துள்ளனர்.
மேலும், கடந்தாண்டு ஜூலை 12 முதல் இம்மாதம் 5ம் தேதி வரை, நகர பஸ்களில் பயணித்த 281.14 கோடி பேரில், 102.83 கோடி பயணியர் மட்டுமே கட்டணம் செலுத்தி பயணித்துள்ளனர்.
இதில் இருந்து தினமும் சராசரியாக 39.21 லட்சம் மகளிர் இலவச பயணம் மேற்கொள்வது தெரிய வந்துள்ளது. இது, மொத்த பயணியரின் எண்ணிக்கையில் 62.90 சதவீதம்.