பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை!

 சிறப்பு சந்தை
சிறப்பு சந்தை

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் வரும் 17ம் தேதி வரை இந்த சிறப்பு சந்தை நடைபெற உள்ளது

பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி போகிப் பண்டிகையில் தொடங்கி, 17- ஆம் தேதி காணும் பொங்கல் வரை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர்.

அதில் வேளாண் விளைப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதற்காக ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக சார்பில், சிறப்பு சந்தை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு சந்தை இன்று நள்ளிரவு (ஜன 10) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

10 நாட்கள் வரை நடைபெற உள்ள, இந்த சிறப்பு சந்தையில் பொங்கலுக்கென்றே அறுவடை செய்யப்படும் செங்கரும்பு , வாழைக் கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து மற்றும் மண்பானை, வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். இதற்காக சிறப்பு சந்தையில் கடை வைக்கவும், சரக்குகளை ஏற்றிக் கொண்டு மார்க்கெட்டில் நுழையும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்பதற்கான ஏலம் கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக சார்பில் நடத்தப்படும்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிறப்பு சந்தையை அங்காடி நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும் என்றும், ஏலத்தில் உரிமம் இல்லாத வெளியாட்களுக்கு ஏலம் மார்க்கெட்டில் கடை நடத்த அனுமதி தரக்கூடாது என்றும், மார்க்கெட்டில் உரிமம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து ஏலம் தரவேண்டும் என்றும் சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

விற்பனைக்காக பொருட்களை மார்க்கெட் உள்ளே கொண்டு வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் உட்புறம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வாகனங்களுக்கு 2000 வரை பார்க்கிங் சார்ஜ் வசூல் செய்வதாகவும், கரும்பு வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வாகனங்களுக்கு 200 ரூபாய் வரை பார்க்கிங் சார்ஜ் வசூல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி இந்த சந்தை குறித்து பேசினார் , ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று இரவு முதல் அமைக்கப்படும் சிறப்பு சந்தையில் மக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு போக்குவரத்தை சீர்செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு சந்தையில் எந்த ஒரு பிரச்னையும் வராமல் இருக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து உள்ளோம். அந்த அதிகாரிகளிடம் சிறப்பு சந்தையில் கூடுதலாக வசூல் யாராவது செய்தாலும் வியாபாரிகள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். இதன்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு சந்தைக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com