
பள்ளிகளில் மாணவர்களை டேபிள் - நாற்காலி துடைப்பது, வகுப்பறையைச் சுத்தம் செய்வது போன்ற எந்த வேலையில் ஈடுபடுத்தினாலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர பள்ளியை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட வேறு எந்த வேலையிலும் ஈடுபடுத்தினால் சம்பந்தபட்ட ஆசிரியர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாணவ - மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். “நான் மாணவர்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து தான் அவர்களுக்கான திட்டங்களை கொண்டு வருகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். அதில் இருந்தே அவர் எந்த அளவுக்கு மாணவர்களின் படிப்பில் அக்கறை கொண்டுள்ளார் என்பது நன்கு தெரியும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொதுத் தேர்வில் மாணவர்களின் ஆப்சென்ட் விகிதம் மிக குறைவாகதான் இருக்கும். அனைத்து மாணவர்களும் விடுபடாமல் பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அதே போல் தேர்ச்சி வீதமும் கடந்த ஆண்டை விட கூடுதலாக இருக்கும்.
இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.