செப்டம்பர் முதல் சேலத்தில் விமான சேவை துவக்கம்!
தமிழ்நாட்டின் முக்கிய வணிகத் தலங்களில் சேலம் மாநகராட்சிக்கு முக்கிய இடம் உண்டு. மஞ்சள், மாம்பழம், ஸ்டீல், ஏற்காடு, மேட்டூர், என்று மக்கள் மனம் கவரும் விஷயங்கள் நிறைய இருக்கிறது. இந்த சிறப்புகளைத் தேடி வரும் வெளியூர் பயணிகளுக்கு பேருந்து ரயில் வசதிகள் இருந்தாலும் விரைவில் செல்ல விமான சேவையும் வேண்டும் என்ற கோரிக்கையால் கடந்த 1993 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரம் பகுதியில் விமான நிலையம் துவங்கப் பட்டது.
சேலத்திலிருந்து விமானங்களை இயக்க விமான நிலையங்கள் முன் வரத் தயங்கின. பின் அரசின் முயற்சியால் உதான் திட்டத்தின் கீழ் ட்ரூஜெட் விமான சேவை நிறுவனம் சென்னை - சேலம் இடையே 2018-ம் ஆண்டில் விமான போக்குவரத்தை தொடங்கியது. இந்த சேவையின் மூலம் தினமும் காலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கும் மறுமார்க்கமாக சேலத்தில் இருந்து சென்னைக்கும் ஒரே ஒரு விமானம் இயக்கப்பட்டு வந்தது. இடையில் வந்த கொரோனாவுக்கு பின், கடந்த 2020-ம் ஆண்டு அந்த விமான சேவையும் நிறுத்தப்பட்டது.
தற்போது சீராகி விட்ட தருணத்தில் மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கும், விமான போக்குவரத்து துறைக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். சேலம் பாராளுமன்ற தொகுதி எம்.பி. பார்த்திபனும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சேவையை அளிக்க அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனமும் முன் வந்துள்ளன. அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் சார்பில் பெங்களூரு-சேலம், கொச்சின்-சேலம், சேலம்-பெங்களூரு ஆகிய விமான சேவைகளை வாரத்தில் 7 நாட்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த விமான சேவையில் இரண்டு விமானங்கள் ஈடுபட உள்ளன. இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் பெங்களூரு-சேலம், ஐதராபாத்-சேலம், சேலம்-பெங்களூரு ஆகிய சேவைகளை வாரத்தில் நான்கு நாட்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கு ஒரு விமானம் பயன்படுத்தப்பட உள்ளது.
இரண்டு விமானங்கள் நிறுத்தி வைக்கும் அளவுக்கு இடம் உள்ள இங்கு தற்போது நான்கு விமானங்கள் நிறுத்தி வைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஒரு மாதத்தில் முடிந்து விமான சேவை செப்டம்பர் கடைசி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.