கொள்ளையைத் தடுக்க ஏ.டி.எம். மையத்தையும் போலீஸ் நிலையத்தையும் இணைத்து அலாரம் கருவி -டி.ஜி.பி. சைலேந்திரபாபு

  கொள்ளையைத் தடுக்க   ஏ.டி.எம். மையத்தையும் போலீஸ் நிலையத்தையும் இணைத்து அலாரம் கருவி -டி.ஜி.பி. சைலேந்திரபாபு

திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் இருந்து 70 லட்சம் ரூபாய் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி கொள்ளை நடத்தியதால் 4 ஏடிஎம் இயந்திரங்களும் எரிந்து சேதம் அடைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப் படைகளும், இதில் வெளி நபர்களுக்குத் தொடர்பு இருப்பதால் மேற்கொண்டு 3 தனிப்படைகளும் என மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.

விசாரணை:

போலீஸ் விசாரணையில் திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள தண்டராம்பட்டு சாலை தேனிமலை அருகே இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஏடிஎமில் மர்ம கொள்ளையர்கள் முதலில் கொள்ளை அடித்துக் கொண்டு, அதன் பின்னர் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் 10-வது தெருவில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் கொள்ளையடித்து, ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி செல்லும் வழியில் உள்ள கலசப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இயங்கி வரும் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்துக்கொண்டு, போளூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையத்தில் மர்ம கொள்ளையர்கள் கொள்ளையடித்துக்கொண்டு கண்ணமங்கலம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 இந்நிலையில் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் வங்கி ஏ.டி.எம். மையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்படும் 50 வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் 3 முக்கிய அறிவுரைகள் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவுரைகளை உடனடியாக செயல்படுத்துமாறு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அந்த அறிவுரைகள் பின்வருமாறு:-

 * அனைத்து ஏ.டி.எம். மையங்களையும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுடன் இணைத்து போலீஸ் நிலையங்களில் அலாரம் கருவிகள் பொருத்த வேண்டும். ஏ.டி.எம். மையங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவியில் அபாய சத்தம் ஒலிக்கும். எனவே போலீசார் உடனடியாக அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.

 * ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை தெளிவாக காட்டும் வகையிலான நவீன கேமராக்களை பொருத்த வேண்டும்.

* இவ்வாறு பொருத்தப்படும் கேமராக்கள் வெளிப்படையாக தெரியாமல் ரகசியமாக இருக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறும்போது,

"மேற்கண்ட பாதுகாப்பு வசதிகளை ஏ.டி.எம். மையங்களில் செயல்படுத்துவதற்கு வங்கிகளுக்கு பெரியளவில் செலவுகள் ஏற்படாது. எனவே இந்த 3 அறிவுரைகளையும் உடனடியாக செயல்படுத்த வங்கி அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com