திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி பெற்றும் வினோதமாக நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர். பாடியூர் இ.புதுாரில் குரும்ப கவுண்டர் ஒளிய குல பங்காளிகளின் குல தெய்வ கோயிலான பெரியகாண்டி அம்மன், அஜ்ஜப்பன், மகாமுனி கோயில் உள்ளது.
இங்கு 7 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று இரவு வழிபாட்டு திருவிழா துவங்கியது. நள்ளிரவில் முதலியார் குளத்தில் இருந்து சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு சேர்வை ஆட்டத்துடன் சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
இன்று காலை கோயில் முன்பாக விரதமிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிப்பாட்டிற்காக அமர்ந்தனர். குரும்ப கவுண்டர் சமூகத்தினர் வழக்கமாக நடத்தும் பாரம்பரிய வழிபாடுகளை பூசாரி பழனிச்சாமி செய்து முடித்த பின்னர் பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார்.
பின்னர் பூசாரியிடம் ஒரு சாட்டையடி வீதம் பெற்ற பின்னர் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வழிபட்டு விரதம் முடித்தனர். வழிபாட்டின் துவக்கம் முதல் இறுதி வரை பக்தர்களும், குழுமியிருந்தவர்களும் 'கோவிந்தா... கோவிந்தா...' என கோஷமிட்டபடி வழிபாடு நடத்தினர்.