ஆண்கள் மட்டும் தான் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியுமா? பெண்களே!! இதோ உங்களுக்கும் ஒரு ஜல்லிக்கட்டு!

ஆண்கள் மட்டும் தான் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியுமா? பெண்களே!! இதோ உங்களுக்கும் ஒரு ஜல்லிக்கட்டு!

திருச்செங்கோட்டில் தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதுமையான முறையில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட நவீன ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நந்தவனம் தெருவில் நவீன ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகள் பிடிப்பதுதான் வழக்கம். ஆனால், இந்த நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் கோழியை பிடிப்பதுதான் முக்கியமான இலக்கு.

ஒரு பெரிய அளவிலான வட்டத்தை வரைந்து அதன் நடுவே போட்டியாளர்கள் நிறுத்தப்படுவார். போட்டியில் ஒரு கயிறு போட்டியாளரின் காலில் கட்டப்படும் அதன் மறுமுனை கோழியின் காலில் கட்டப்படும். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வட்டத்தை விட்டு வெளியேறாமல் கோழியை பிடிக்க வேண்டும்.

கயிற்றை கையில் பிடித்தோ, காலில் பிடித்தோ இழுக்கக் கூடாது என்பது முக்கியமான நிபந்தனை.

ஜல்லிக்கட்டில் சீறிவரும் காளையை பிடிப்பார்கள். ஆனால், இதில் கண்களைக் கட்டிக் கொண்டு கோழியை பிடிக்க வேண்டும்.

இந்த போட்டி குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் கூறுகையில், 'நவீன ஜல்லிக்கட்டு என்பது போட்டியாளரின் கால்களில் ஒரு கயிற்றின் ஒரு முனையும் மறுமுனை கோழியின் காலிலும் கட்டப்பட்டு போட்டியாளரின் கண்கள் கட்டப்படும். தன் உணர்வின் மூலம் கோழியை பிடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி வீரத்துக்கு பெயர் பெற்றது என்றால் இந்த நவீன ஜல்லிக்கட்டு போட்டி விவேகத்திற்கு பெயர் பெற்ற போட்டி' என கூறினார்.

பெண்களுக்கான இந்த நவீன ஜல்லிக்கட்டு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக சேலத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண் கூறியுள்ளார். இந்த போட்டியில் ஏராளமான பெண்களும் சிறுமிகளும் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com