திருச்சியில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பிரமாண்ட வரவேற்பு!

 முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சியில் ரூ.1,042 கோடி மதிப்பிலான நல திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப் பட்டது.

-இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் இன்று காலையில் நடைபெறும் அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில், ரூபாய் 655 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும் 22 ஆயிரத்து 716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும்  வழங்குகிறார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்கி, மணிமேகலை விருது வழங்கி கவுரவிக்கிறார்.

மேலும் இன்று காலை 11.30 மணிக்கு மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் ரூபாய் ஆயிரத்து 350 கோடி மதிப்பில் டிஎன்பிஎல் ஆலையின் 2ம் அலகையும், சிப்காட் தொழிற்பூங்காவையும் முதல்வர் திறந்து வைக்கிறார். பின்னர் மாலை 3 மணிக்கு மணிகண்டம் ஒன்றியம் சன்னாசிப்பட்டியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சை பெறும் பயனாளியின் இல்லம் சென்று நலம் விசாரிக்கிறார். ஒரு கோடியே 1-வது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தையும் வழங்குகிறார் என்று  தெரிவிக்கப் பட்டுள்ளது.

முதல்வரின் வருகையொட்டி திருச்சி, மணப்பாறை பகுதி சாலைகள், பாலங்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் அமைச்சராக பதவியேற்ற பின் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருச்சி வருகிறார் என்பதால் திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com