திருவாரூர் கமலாலய தெப்பக்குளத்தில் படகில் சென்று நினைவுகளை அசை போட்ட முதல்வர்!

திருவாரூர் கமலாலய தெப்பக்குளத்தில் படகில்  சென்று நினைவுகளை அசை போட்ட முதல்வர்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ள நிலையில், நேற்று இரவு கமலாலய தெப்பக்குளத்தில் படகில் சவாரி செய்தார். திருவாரூர் கமலாலயக் குளத்தின் வடக்குக் கரையிலிருந்து படகின் மூலம் குளத்தின் நடுவில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமலாலய குளம் தொடர்பாக தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

நேற்று திருவாரூர் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் தனது மனதிற்கு மிகவும் பிடித்த அந்த கமலாலய குளத்தின் கரையில் வெகுநேரம் அமர்ந்து குளத்தை ரசித்து, தனது தந்தையின் நினைவை அசைபோட்டு இருக்கிறார். தனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் நினைவாலயத்திற்கு சென்று மீண்டும் திருவாரூர் திரும்பிய ஸ்டாலின் கமலாலயக் குளத்தை பார்த்ததும் காரை விட்டு இறங்கி குளத்தின் கரையில் அமர்ந்தார். டி.ஆர்.பாலு, பூண்டி கலைவாணன் உள்ளிட்ட தனது சகாக்களுடன் அமர்ந்து, அதை பற்றிய நினைவலைகளையும் அசை போட்டார். பிறகு படகு மூலம் குளத்தில் நடுவில் இருக்கும் கோயிலுக்கும் சென்று வந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர்.

இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவாரூர் தேரை ஓட வைத்ததும், கமலாலயக் குளத்தில் கரைகளை சீரமைத்து தந்ததும் நாத்திகரான கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com