தொடரும் கந்துவட்டி… அதிகரிக்கும் தற்கொலைகள்.

தொடரும் கந்துவட்டி… அதிகரிக்கும் தற்கொலைகள்.

ன்றைய நாகரீக உலகில் இருப்பதைக்கொண்டு வாழாமல் தேவைக்கு மேல் கடன்களைப் பெற்று அதைக்கட்ட முடியாமல் அவஸ்தைப் படுவோர் ஏராளம். அதிலும் அதிக வட்டியுடன் வாங்கும் கந்துவட்டிக் கடன்கள் வாங்குவோரின் உயிரையே காவு வாங்கும் சம்பவங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் உள்ளன.
       சேலம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். வயது 65. இவர் சைக்கிள்களை பழுது பார்க்கும் கடை வைத்திருக்கிறார். இவரது மனைவி சாந்தி 55 வயது. இவர்களுக்கு ராமகவுண்டர், ராமவேல் என்ற மகன்களும் தமிழரசு என்ற மகளும் உள்ளனர். இவர்களில் ராம கவுண்டர் தனியார் கல்லூரி ஒன்றில் ஓமியோபதி மருத்துவராக உள்ளார். ராமவேல் ஆட்டோ ஓட்டி வருகிறார் .

          ராஜேந்திரன் தனது மகன்களுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து  வந்தார். இந்த நிலையில் 24-01-2023 அன்று அதிகாலை மகன் ராமவேல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது கீழ்தளத்தில் உள்ள பெற்றோரின் அறைக்கதவு திறந்தே இருப்பதைப் பார்த்து உள்ளே செல்ல, அங்கு வாயில் நுரை தள்ளியபடி பெற்றோர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் அருகே விஷபாட்டில் கிடந்ததால் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து வேதனை அடைந்த குடும்பத்தினர்  போலீஸ் நிலையத்திற்கு தகவல் தந்ததில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ராஜேந்திரன் சாந்தியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு  அனுப்பி வைத்தனர்.

          இவர்களின் தற்கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல் இது. ராஜேந்திரன் கடந்த 2015 ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 15 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதன் பிறகு அவர் அந்த பணத்துக்குரிய வட்டியைக்  கட்டவில்லை இதனால் வட்டியுடன் சேர்த்து 18 லட்சம் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு வங்கி சார்பில் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து  அவர் அதே பகுதியை சேர்ந்த நடேசன் மூலம் உலகநாதன் என்பவரிடம் ரூபாய் 19 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்தப் பணத்தை கொண்டு வங்கி கடனை அடைத்தார். ஆனால் அவரால் உலகநாதனிடம் பெற்ற கடனை  திரும்ப கொடுக்க முடியவில்லை. தற்போது கந்துவட்டியும்  சேர்த்து 40 லட்சம் உடனடியாக தருமாறு கடன் கொடுத்தவர்கள் ராஜேந்திரனை மிரட்டி உள்ளனர். தொல்லை அதிகரித்ததால் வீட்டை விற்று கடனை அடைக்கப் போவதாக நண்பர் ஒருவரிடம் ராஜேந்திரன் கூறியுள்ளார். இதற்கிடையில் மிகவும் மன உளைச்சலில் காணப்பட்ட ராஜேந்திரன் தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார். 23-01-2023 அன்று இரவு இருவரும் தண்ணீரில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். ராஜேந்திரன் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை கேட்டு தொந்தரவுபடுத்தினர். இதனால் எங்களுடைய சாவுக்கு ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட ஆறு பேர்தான்  காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடிதம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தியதில் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்த உலகநாதன், நடேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

        இருந்தாலும் மகன்கள், மகள் என சந்தோசமாக இருந்த குடும்பம் இப்படி கந்துவட்டிக்கு வாங்கி வீடு கட்டி அதிலிருந்து மீள முடியாமல் தற்கொலையை நாடுவது சரிதானா எனும் கேள்வியும் எழத்தான் செய்கிறது. கந்துவட்டி என்பது மீளமுடியாத புதைகுழி என்பது தெரிந்தே அதில் மாட்டும் அப்பாவிகளை என்ன சொல்வது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com