தீண்டாமைக் கொடுமை- இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக!' - மநீம வலியுறுத்தல்!

தீண்டாமைக் கொடுமை- இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக!' - மநீம வலியுறுத்தல்!

மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


"கடந்த சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களை அங்குள்ள ஆலயத்திற்குள் சென்று கடவுள் வழிபாடு செய்ய அனுமதி மறுத்தும், அந்த கிராமத்தில் பொது இடங்களை பயன்படுத்த தடை விதித்தும் வந்துள்ளது. இதை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வன்மையாகக் கண்டிக்கிறது. 

தந்தை பெரியார் வழி வந்தவர்கள் என கூறிக் கொண்டு சுமார் 50ஆண்டுகாலமாக தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்து வந்த அதிமுக, திமுக கட்சிகள் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு இன்னும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.     

 இந்திய தேசம் சுதந்திரமடைந்து 75ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னும் தீண்டாமை கொடுமைகள் நடைமுறையில் இருந்து வரும்போது தற்போது வேங்கைவயல் கிராமத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காகவும், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி ஆட்சிபுரிவதாகவும் கூறி தற்போதைய ஆட்சியாளர்கள் பெருமைப்படக் கூடாது. 

 வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி அங்கே நடைபெற்ற தீண்டாமை கொடுமை விவகாரத்தில் தலையிட்டு, நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளோடு பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் சிறப்பாக செயல்பட்டு பட்டியலின மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்று அவர்களை கடவுள் வழிபாடு செய்ய வைத்ததோடு, தீண்டாமைக் கொடுமைகளை கடைபிடித்து வந்தோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தனர்.  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரது செயலை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மனதார பாராட்டுகிறது.

அதே சமயம் இந்த தீண்டாமை நிகழ்வுகள் என்பது இன்று, நேற்றோ அல்லது திடீரென்று நடந்த நிகழ்வாகவோ இருந்திருக்க முடியாது எனும் போது, இதுவரை அந்த அவலத்தை சரி செய்ய அல்லது தீண்டாமைக் கொடுமைகள் புரிவோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் முன் வராமல் இருந்திருப்பதும் கொடுமையிலும் கொடுமையாகும்.

  தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல்,   தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் புரிவோரை சமூக விரோதிகளாக கருதி அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும், சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சரியான முறையில் கடைபிடிக்கவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com