பழைய கட்டிடங்களை இடியுங்கள்: தமிழக அரசு உத்தரவு!
தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கட்டிடங்களை இடித்துத் தள்ளும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பள்ளி கட்டிடங்கள், சமையல் கூடங்கள், நூலக கட்டிடங்கள், கழிவறை வளாகங்கள், அலுவலக கட்டிடங்கள், மேல்நிலைநீர் தேக்கத் தொட்டிகள் ஆகியவை மிகவும் பழுதடைந்துள்ளதாக உள்ளன என்றும் அவற்றை இடிப்பதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை வழங்க கோரிக்கை விடுக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டதாவது;
தமிழகத்தில் , ரூ.20 லட்சம் மற்றும் அதற்கு மேல் 20 ஆண்டுகளுக்குள் உள்ள பழுதடைந்த நிலையிலான கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து மாநகராட்சி கமிஷனரும், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரும் இறுதி உத்தரவு வழங்குவர். அதேபோல ரூ.5 லட்சம் வரை மதிப்புடைய 40 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கட்டிடங்களை மாநகராட்சி கமிஷனரும், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரும் இறுதி உத்தரவு வழங்குவர்.
மிகவும் பழுதான கட்டிடங்களை இடிக்கும்போது, பணியாளர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் கட்டிடங்களின் அருகில் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பு விதிகளை பின்பற்றி அக்கட்டிடம் இடிக்கப்பட வேண்டும்.
-இவ்வாறு கட்டிடங்களை இடிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளது.