சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுப்பு - உயர் நீதிமன்றம் கண்டனம்

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுப்பு - உயர் நீதிமன்றம் கண்டனம்

ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

வேலூரில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியில், சிறப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்த சிறப்பு ஆசிரியர்கள் உள்ளதாக, அந்த பள்ளியின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததால், ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தனது குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க கோரி பள்ளி நிர்வாகத்தை நாடியுள்ளார் குழந்தையின் தாய்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்கு எல்லாம் முடிந்த பின், தற்போது இங்கு சிறப்பு ஆசிரியர்கள் இல்லை. அதனால் குழந்தைக்கு இங்கு மாணவர் சேர்க்கை வழங்க இயலாது என்று பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.

இதனால் மனவேதனை அடைந்த குழந்தையின் தாய், இதனை எதிர்த்து குழந்தையின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன், "குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்ததன் மூலம், அந்த பள்ளி, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டது.

 கடந்த 1870ஆம் ஆண்டில் இருந்து 1960ஆம் ஆண்டு வரையில் வாழ்ந்து மறைந்த புனிதர், இந்திய பெண்களுக்காகவும், தொழு நோயாளிகளுக்காகவும் ஓய்வின்றி பணியாற்றி உள்ளார். அத்தகைய புனிதர்களின் கொள்கைகளை பின்பற்றாமல், அவர்களின் பெயரை மட்டும் பயன்படுத்துவது துரதிஷ்டவசமானது, வேதனைக்குறியது என்று கண்டனம் தெரிவித்தார்.

 ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள அக்குழந்தைக்கு அரசுத் தரப்பில் சில பள்ளிகளைக் குறிப்பிட்டு அதில் சேர்க்கை வழங்க பள்ளி நிர்வாகம் தயாராக உள்ளதாகக் கூறியுள்ள நிலையில், இந்த மிஷனரி பள்ளியில் தனது குழந்தையை சேர்ப்பது என தாய் முடிவு செய்தால், அது நீதிமன்றத்துக்கு திருப்தி அளிக்கும். இது தொடர்பாக தாயே முடிவெடுத்துக் கொள்ளலாம்" என தெரிவித்து வழக்கை முடித்து வைக்கப்பட்டது.

இதனிடையே வழக்கு விசாரணையின் பிந்தைய நாட்களில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க சம்பந்தப்பட்ட பள்ளி முன் வந்துள்ளது.

இதை அப்பள்ளி நிர்வாகம் முதலிலேயே செய்திருந்தால் நீதிமன்றத்தின் நேரமும் மிச்சமாகியிருக்கும், அக்குழந்தையின் தாய்க்கு மனவேதனையும் ஏற்பட்டிருக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com