தமிழ்நாட்டில் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது – பள்ளி மாணவர்களையும் இது விட்டு வைக்கவில்லை. இது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கூல் லிப் (cool lip) எனும் போதை பொருளும் பள்ளி மாணவர்களிடை பிரபலமடைந்துள்ளது. இது துணி மூட்டை போல் இருக்கும். நாக்கின் கீழே வைத்துக்கொண்டால் போதும். இது ஒரு வித போதையை மாணவர்களுக்கு தருகிறது. இது பல இடங்களில் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன.
இது ஒருபுறமிருக்க இலங்கையிலிருந்து ஒரு போதைப் பொருள் கடத்தல் கும்பல் தப்பித்து இந்தியாவுக்குள் ஊடுருவியதாகவும், அவர்கள் மூலமும் போதை பொருள்கள் விற்பனை அமோகமாக நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவற்றையெல்லாம் எப்படி தடுப்பது, இரும்பு கரம் கொண்டு போதைப் பொருள் ஊடுருவலை எந்தெந்த வழிகளில் தடுப்பது, எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, மாணவர்களின் படிப்பு, எதிர்காலம் பாதிக்காத வகையில் போதையின் பிடியில் இருந்து அவர்களை மீட்டெடுக்க எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற பல ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்திறை முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.