எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமண விழா

 எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமண விழா

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா, ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாள் விழா மற்றும் அதிமுகவின் 51வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு ஜெ., பேரவையின் சார்பில், மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நாளை மறுநாள் (பிப்ரவரி 23-ம் தேதி) வியாழக் கிழமை அன்று “சமத்துவ சமுதாய திருமண விழா” நடைபெறுகிறது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மகள் பிரியதர்ஷினி உட்பட 51 ஏழை, எளிய மணமக்களுக்கு சமத்துவ சமுதாய திருமணத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வைக்கிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.பி. உதயகுமாரின் மூத்த மகளான பிரியதர்ஷினியின் திருமணம் பிப்ரவரி 23ஆம் தேதி (நாளை மறுநாள்) மதுரை டி.குன்னத்தூரில் அமைந்துள்ள “அம்மா திருக்கோவில் மணி மண்டபத்தில்” நடைபெறவுள்ளது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துக்கொண்டு உதயகுமாரின் மகள் உள்ளிட்ட 51 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

தேர்வு செய்யப்பட்ட 51 ஜோடி மணமக்களுக்கு திருமண நாளில் அணியும் மணமகளுக்கான முகூர்த்த பட்டுப் புடவை, மணமகனுக்கு முகூர்த்த பட்டு வேஷ்டி வழங்கப்படுகிறது.

நேற்று ஆர்.பி.உதயகுமார் திருமண மேடைக்கான பந்தல், சமையல் செய்யும் கூடங்கள், உணவு அருந்தும் இடங்கள், வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

 அதன்பின்னர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"ஜெயலலிதா தனது பிறந்த நாள் விழாவில், எத்தனை நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தினாலும், அவருக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால் ஒவ்வொரு ஆண்டும், அவரின் திருப்பெயரால் நடைபெறும் திருமண நிகழ்ச்சியே ஆகும். ஏற்கெனவே ஜெ., பேரவை சார்பில், ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 60 திருமணங்கள், அதனைத் தொடர்ந்து 120 திருமணங்கள் என நடைபெற்றுள்ளது.

தற்போது ஜெயலலிதாவுக்கு பிடித்தமான இந்த திருமண விழாவை நடத்தும் வாய்ப்பை ஜெ., பேரவைக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, வழங்கி உள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த திருமணத்தில் மூகூர்த்த புடவை, வேட்டி, தாலிக்கு தங்கம், சீர் வரிசைப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எனது மகளுக்கு வழங்குவதைப் போல் ஒரே மாதிரியாக 51 ஜோடி மணமக்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த 51 ஜோடி மணமக்களுக்கு எடப்பாடி கே.பழனிசாமி தனது திருக்காரத்தால் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறார். இந்த திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களின் பெற்றோர்கள், அவர்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என வரும் அனைவரும் நாற்காலியில் அமர்ந்து திருமண விழாவை காணும் வகையில் தகுந்த ஏற்பாடுகளும் மற்றும் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 23-ம் தேதி காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலுக்கு வரும் கே.பழனிசாமிக்கு பாரம்பரியமிக்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அதன்பிறகு தனது திருக்காரத்தால் எனது மகள் பிரியதர்ஷினி முரளி மணமக்கள் உள்ளிட்ட 51 ஏழை எளிய மணமக்களுக்கு மாங்கல்யத்தை எடுத்து தந்து சமத்துவ சமுதாயத்தை நடத்தி வைக்கிறார். தெரிவித்தார்.

தனது மாவட்டத்திற்கு மட்டுமல்லாது தென் மாவட்டங்கள் முழுவதும் கட்சியினருக்கு திருமண தாம்பூலத் தட்டுகள் வழங்கி அழைப்பு விடுத்துள்ளது அதிமுகவினர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ்ஸின் செல்வாக்கைச் சரித்து தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் உதயகுமாருக்கு, இந்த பிரமாண்ட திருமண விழா ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com