இந்தியாவில் முதல்முறையாக மகாபலிபுரத்தில் சர்வதேச சர்ஃபிங் ஓபன் போட்டி!
சென்னை அருகே மகாபலிபுரத்தில், சர்வதேச சர்ஃபிங் ஓபன் போட்டி, ஆகஸ்ட் 14 முதல் 20ம் தேதி வரை நடைபெற இருப்பதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன் மற்றும் இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் சங்கம் இணைந்து நடத்தும் சர்ஃபிங் ஓபன் போட்டியானது, இந்தியாவில் முதன் முறையாக மகாபலிபுரத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், சர்வதேச சர்ஃப் ஓபன்- தமிழ்நாடு போட்டிக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது.
அதில், இந்தியாவின் முதல் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் ஆகஸ்ட் 14 - 20 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதோடு, இதற்காக அரசு சார்பில் ரூ.2.67 கோடிக்கான காசோலையையும் வழங்கப்பட்டது.

மேலும் இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதேபோல், சர்வதேச ஹாக்கி போட்டியும், 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இதுபோல பல சர்வதேச நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நான் உங்களை சந்திப்பேன் என வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் தற்போது, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நான் உங்களை சந்தித்து வருகிறேன். அதிலேயே நீங்கள் தெரிந்துகொள்ளலாம், இந்த அரசு, விளையாட்டுத்துறை மீது எவ்வளவு முக்கியத்துவம் செலுத்தி வருகிறது என்று. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் இந்திய சர்ஃபிங் சங்க தலைவர் அருண் வாசு, விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர், செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.