குற்றாலத்தில் நுழைவு கட்டணம் வசூலிப்பதில் மோசடி: வனவர் சஸ்பெண்ட்

குற்றாலத்தில் நுழைவு கட்டணம் வசூலிப்பதில் மோசடி: வனவர் சஸ்பெண்ட்

கோவை, குற்றாலம் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வனத்துறை சார்பில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்டதாக வனவர் ராஜேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். வனவர் ராஜேஷ்குமார் பதுக்கி வைத்திருந்த ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நுழைவு கட்டணம் செலுத்தி சீட்டுகளை வழங்க கொடுக்கப்பட்ட இயந்திரத்தை வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம் சாடிவயல் போளுவாம்பட்டி வனப்பகுதியில் அமைந்துள்ளது குற்றால அருவி. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகாவில் இருந்தும் குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். போளுவாம்பட்டி வனச்சரம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் 2 இயந்திரங்கள் வைத்து நுழைவுச்சீட்டை அச்சிட்டு பணத்தை பெற்று வந்துள்ளனர்.

ஆனால் அரசுக்கு ஒரு இயந்திரத்தில் பதிவாகும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கான தொகை மட்டுமே செல்லும். மற்றொரு இயந்திரத்தில் நுழைவு கட்டணம் போன்றே போலியான நுழைவு சீட்டை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி அதற்காக வசூலிக்கப்படும் தொகையை அதிகாரிகளே எடுத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 6 மாத காலத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றதும், இங்கு முன்பிருந்த வனச்சரக அதிகாரிக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் உறுதியானது.

இந்த மோசடி தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வனவராக பணிபுரிந்து வரும் ராஜேஷ்குமார், இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் முன்னாள் போளுவாம்பட்டி சரக ரேஞ்சர் சரவணன் உதவியுடன், கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து போலி நுழைவுச்சீட்டுகளை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, போலி நுழைவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட  வனவர் ராஜேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவிட்டார். மேலும், அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

வனத்துறை அதிகாரிகளே போலி நுழைவுச்சீட்டு அச்சிட்டு வழங்கி மோசடியில் ஈடுபட்டது சுற்றுலா பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com