திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பெற்றோருடன் நடந்து சென்ற 6 வயது சிறுமி திடீரென காணாமல் போன நிலையில் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நெல்லுரை சேர்ந்த தினேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். தனது 6 வயது மகள் லட்ஷிதா உட்பட குடும்ப உறுப்பினர் அனைவரும் திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். அப்போது மலைப் பாதையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே லட்ஷிதா திடீரென காணாமல் போனார்.
பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், திருமலை இரண்டாவது நகர காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விசாரணையும் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை வனப்பகுதியில் லட்ஷிதா காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
ஏற்கனவே ஒரு சிறுவனை சிறுத்தை இழுத்து சென்று உயிருடன் விட்டு சென்றது. இதன் அடிப்படையில் போலீசார், சிறுமியை சிறுத்தை தான் தாக்கி கொன்றதா அல்லது சிறுமியின் இறப்புக்கு என்ன காரணம் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தேவஸ்தானம் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இருந்த பகுதியின் அருகே சிறுத்தைகள் நடமாட்டம் இருந்தது பதிவாகியுள்ளது.