ஆளுநர் உரை; சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்!

ஆளுநர் உரை; சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்!

ந்த வருடத்தின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடங்கிவைத்து உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில வார்த்தைகளை மட்டும் தவிர்த்துவிட்டு மற்றவற்றை அவையில் பேசினார். ஆளுநரின் இந்தச் செயலுக்கு ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தன. அதோடு, ‘ஆளுநரின் இந்த உரையை அவைக் குறிப்பில் ஏற்றக் கூடாது’ என்ற தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இதனால் இந்தக் கூட்டத் தொடரின் பாதியிலேயே ஆளுநர் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறுவது சட்டமன்ற மரபு. இந்த நிலையில் ஆளுநரின் சட்டமன்ற உரை அவைக் குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், சட்டப் பேரவை செயலர் மூலம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், "தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கு இப்பேரவை தனது வருத்தத்தைப் பதிவு செய்கிறது. பேரவையின் மாண்பினை போற்றிடும் வகையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாளன்று பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநர் பேருரைக்கு இப்பேரவை உறுப்பினர்கள் நன்றி உடையவர்கள் ஆவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில், ஆளுநர் உரை தொடர்பாக இதுபோன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பப்படுவது இதுவே முதல் எனக் கூறப்படுகிறது. தவிர, இந்த முறை ஆளுநர் வாசித்த உரையே அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பதால், இதுபோன்ற ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றதில் இருந்தே இவருக்கும் மாநில அரசுக்கும் பெரும் மோதல் போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இக்கடிதம் தொடர்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ரீயாக் ஷன் எப்படி இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com