அரசு கேபிள் டிவி விரைவில் சிறப்பாக செயல்படும்; அமைச்சர் மனோ தங்கராஜ்!

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் விரைவில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

 இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 'அடுத்த தலைமுறைக்கான இணையம் 3.0' என்ற சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பிரதி எடுக்க முடியாத பாதுகாப்பு அம்சங்கள் (என்எஃப்டி)கொண்ட, மெய்நிகர் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட 'நேற்றுஇன்று நாளை' என்ற காணொலியையும் அவர் வெளியிட்டார்.

இதில், இந்திய தொழில் கூட்டமைப்பின் சென்னை மண்டல தலைவர் ஜெ.முருகவேல், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கலிடம் கூறியதாவது: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறி வருகிறது.

கடந்த ஓராண்டாக தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகத்தின் வளர்ச்சி உச்சத்தை எட்டி உள்ளது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் 'யூ மேஜின்' எனப்படும் 3 நாள் கருத்தரங்க மாநாடுசென்னையில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நிறுவனங்கள் பல உள்ளன. இத்தகைய நிறுவனங்களுக்கு நிதி அளிப்பவர்கள் அனைவரும் இந்த கருத்தரங்க மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இதன்மூலம் புதிதாக தொழில் தொடங்க இருப்பவர்கள் பயனடைவார்கள்.

 மேலும் தமிழகத்தில் 500 பஞ்சாயத்து பகுதிகளில் 'பாரத் நெட்' திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அரசு கேபிள் டிவி விரைவில் பழைய நிலைக்கு திரும்பி, சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பில் தகவல் தொழில்நுட்பமையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கையால் தமிழகத்தில் எந்த வித பாதிப்பும் இல்லை.

-இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com