யூடியூப் பார்த்து ஏசி அறையில் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்தி கஞ்சா வளர்த்து விற்பனை செய்த பலே கோஷ்டி கைது!
சென்னை: ஏசி அறையில் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்தி கஞ்சா வளர்த்த சென்னை தொழில்நுட்ப வல்லுநர் & கோ கைது!
சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாதம்பாக்கத்தில் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்ததாக 4 பேரை சென்னை காவல்துறையின் சிறப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, ஒரு போலீஸ்காரர் தன்னை ஒரு வாடிக்கையாளராக காட்டிக்கொண்டு கஞ்சா வியாபாரி ஒருவரை அணுகவே, அதை நம்பி அவர், வாடிக்கையாளர் வேடத்தில் இருந்த போலீஸ்காரரை மாதம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார். அண்டக் குடியிருப்பு இருந்த பகுதியானது அங்கிருக்கும் பசுமைக்காகவும், தேனுபுரீஸ்வரர் கோயிலுக்காகவும் மிகவும் பிரசித்தி பெற்ற பகுதிகளில் ஒன்று.
அங்கிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், நார்த் பீச் போலீஸ் ஸ்டேஷனின் போலீஸ் குழு, சக்திவேல் எனும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் அவரது நண்பர்களான, ஷியாம் சுந்தர், ஸ்ரீகாந்த் மற்றும் நரேந்திர குமார் ஆகியோருடன் இணைந்து கஞ்சா செடிகளை வளர்ப்பதற்காக ஒரு பிரத்யேக அறையையே உருவாக்கி வைத்து அதில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததைக் கண்டறிந்தனர். இணையத்தில் வீடியோக்களைப் பார்த்து, சூரிய ஒளிக்கு மாற்றாக எல்இடி விளக்குகளைப் பயன்படுத்தி வீட்டுக்குள்ளேயே கஞ்சா வளர்க்க கற்றுக் கொண்டதாகவும், அதில் கற்றுக் கொண்ட முறையிலேயே ஏசி அறையில் கஞ்சா செடிகளை வளர்த்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையில், சக்திவேல் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்து வந்ததும், நஷ்டத்தை ஈடுகட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கஞ்சாவைத் தவிர, இந்த குழு போதைப்பொருள் ஸ்டாம்ப் முத்திரைகளையும் விற்பனை செய்தது தெரிய வந்தது. அந்தவீட்டில் இருந்து மூன்று கிலோ கஞ்சா மற்றும் எல்எஸ்டி ஸ்டாம்ப் முத்திரைகளையும் கூட போலீசார் மீட்டனர்.
பிடிபட்டவர்களில்ல் ஷியாம் சுந்தர் ரயில்வே துறையில் பணிபுரிபவர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ரயில்வேயில் அவர் ஒப்பந்த ஊழியரா அல்லது நிரந்தர ஊழியரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் குற்றம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதேபோல், கடந்த வாரம் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை) போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மூலமாக சென்னை மாநகர போலீஸார் 25 வழக்குகள் பதிவு செய்து 32 பேரைக் கைது செய்தனர். மேலும் 262.77 கிலோ
கஞ்சா, 1.75 கிலோ கஞ்சா கலந்த சாக்லேட், 10 கிராம் மெத்தம்பெட்டமைன், 50 கிராம் கஞ்சா எண்ணெய், 1,440 வலி நிவாரண மாத்திரைகள், 5 மொபைல் போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் ரூ. 750 ரொக்கம் பிடிபட்டதாகத் தகவல்.