நிலைகுலைந்த இமாச்சல பிரதேசம்.. 2 நாட்களில் 60 பேர் பலியான சோகம்!

Himachal Pradesh
Himachal Pradesh
Updated on

னமழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது இமாச்சல பிரதேசம். நிலச்சரிவால் வீடுகள், கோயில்கள் உள்ளிட்டவை இடிந்ததில் இரண்டு நாட்களில் 60 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த சில தினங்களாக கொட்டித்தீர்த்து வரும் கனமழையில், இமாச்சல பிரதேச மாநிலத்தின் பெரும்பகுதிகளில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம், மேக வெடிப்பு என ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்படுள்ளது. ஷிம்லா அருகே சம்மர் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், சிவன் கோயில் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து மண்ணில் புதைந்த சம்பவத்தில் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.

இதற்கிடையே, ஷிம்லாவின் கிருஷ்ணா நகர் பகுதியிலும், நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். கடந்த இரு தினங்களில் மட்டும் இமாச்சல பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர் பகுதிக்கு சென்று பார்வையிட்ட முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தயவு செய்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையே, மண்டி மாவட்டத்தில் உள்ள பயாஸ் ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நபரை கன்சா கட் அருகே இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டனர். ஷிம்லா, ஃபதேபூர், இண்டோரா மற்றும் கங்ரா என பல்வேறு மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களை ராணுவத்தினர் படகு மூலம் மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

இதேபோன்று, படகுகள் செல்ல முடியாத இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய 150க்கும் மேற்பட்டோரை விமானப்படை வீரர்கள் சினுக் ரக ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். இந்நிலையில், இமாச்சல பிரதேசத்துக்கு இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரிகளில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com