ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை இலக்கை எப்படி எட்டப்போகிறீர்கள்? - உயர் நீதிமன்றம் கேள்வி!
சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை இலக்கை எப்படி எட்டப்போகிறீர்கள்? என்று, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன், மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 18ல் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தது.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்தது.
மீன்களை கழுவுவதற்காக சாலைகள்? நடைபாதையை ஆக்கிரமித்து உணவகங்களை நடத்த அனுமதித்தது எப்படி? என்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி கேள்வி எழுப்பினர்.
சாலை ஆக்கிரமிப்பை சகிக்கவும் முடியாது, சமரசமும் செய்ய முடியாது என்று கூறிய நீதிபதிகள், சாலையில் ஆக்கிரமிப்புக்கு தான் அனுமதிக்கப்படுகிறது, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று காட்டமாக தெரிவித்தனர்.

லூப் சாலை மீன் வியாபாரிகளுக்காக செலவில் மீன் சந்தை கட்டப்படுவதாகவும், 6 மாதங்களில் பணிகள் முடிவடைந்துவிடும் என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
லூப் சாலை மீன் வியாபாரிகளுக்காக 9.97 கோடி ரூபாய் செலவில் மீன் சந்தை கட்டப்படுகிறது என்றும், அவர்களின் வாழ்வாதாரம் கருதி போக்குவரத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலையின் மேற்கு பகுதியில் உள்ள உணவகங்களின் உரிமங்கள் ஆய்வு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.