‘காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு’ கமல் அறிவிப்பு!

‘காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு’ கமல் அறிவிப்பு!

ரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் இறந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர், அந்தத் தொகுதியின் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகனின் தந்தையுமாவார்.

இடைத்தேர்தலில் போட்டியிடும் இளங்கோவன் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து தமக்கு ஆதரவு கோரி வந்தார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோரி இருந்தார். கமல்ஹாசன் தமது இயக்க நிர்வாகிகளுடன் பேசிவிட்டுச் சொல்வதாகக் கூறியிருந்தார். அதன்படி மக்கள் நீதி மய்யத்தின் அவசர கால நிர்வாகக் குழு செயற்கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் கூடி பேசி முடிவெடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்கு உதவுவோம். எனது நண்பரும் பெரியாரின் பேரனுமான இளங்கோவனை இந்த இடைத் தேர்தலில் ஆதரிப்போம். காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறது. மேலும், இந்த இடைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என அறிவித்துள்ளார்.

மேலும் அவர், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com