மாநகராட்சி பள்ளிகளில் மேயர் பிரியா ராஜன் திடீர் ஆய்வு.

 மாநகராட்சி பள்ளிகளில் மேயர் பிரியா ராஜன்  திடீர் ஆய்வு.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நேற்று திரு.வி.க.நகர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

திரு.வி.க. நகர் பகுதிக்குட்டபட்ட மாநகராட்சி பள்ளியில் கல்வி சார்ந்த செயல்பாடுகள், பெரம்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், 5,50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளி,  பெரம்பூர் மேம்பாலம் அழகுப்படுத்தும் பணி ஆகிவற்றை மேயர் பிரியா ராஜன் நேற்று ஆய்வுசெய்தார்.

  சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட நகரமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இது மத்திய அரசின் திட்டம் என்றாலும் தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இப்பணிகளில் மேயர் பிரியா ராஜனின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

சென்னை மேயர் பிரியா ராஜன், இளம் பெண் மேயர் என்ற பெருமைக்குரியவர், கடந்த டிசம்பர் மாதம் வீசிய மாண்டஸ் புயல் மற்றும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காலை 6 மணிக்கெல்லாம் சென்று பார்த்து, தேவையான உதவிகளை செய்ய மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பருவமழை பாதிப்புகளின் போது சென்னை மக்களை சந்தித்து புள்ளி விவரங்களுடன் அரசின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்து கவனம் ஈர்த்தார்.

 அதேசமயம் ஊடகங்களை சரியாக கையாளத் தெரியவில்லை, அமைச்சர்கள் இவரை சிறுபிள்ளை போல நடத்துகிறார்கள் என அவ்வப்போது சர்ச்சைகளும் எழாமல் இல்லை.

ஒவ்வொரு கட்டத்திலும் தனது நிலையை மேம்படுத்தி காட்டியிருக்கிறார்.

 இவை எல்லாவற்றையும் ஓரங்கட்டும் வகையில் தனது களப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் சமையல் கூடங்களில் திடீர் ஆய்வு செய்து அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.


நேற்றைய தினம் மாநகராட்சி பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு நடத்தினார். திரு.வி.நகரில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று சில வகுப்பறைகளில் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து கொண்டு ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை கவனித்தார். சிறந்த முறையில் அனைத்து பாடங்களும் நடத்தப்படுகிறதா? என்று மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

 சென்னை மேயர் பிரியா ராஜன் உடன் திரு.வி.க நகர் எம்.எல்.ஏ தாயகம் ரவி, மண்டல அதிகாரி முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக திரு.வி.நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மேயர் பிரியா ஆய்வு செய்தார்.

 அதன் பிறகு கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், கூக்ஸ் சாலையில் 5.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர் நிலைப் பள்ளியையும் மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தது கவனிக்கத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com