6 அரசு அலுவலர்களுக்கு ஒரே நாளில் 'மெமோ' - மாவட்ட ஆட்சியர் அதிரடி

6 அரசு அலுவலர்களுக்கு ஒரே நாளில் 'மெமோ' - மாவட்ட ஆட்சியர் அதிரடி

பணியில் மெத்தனமாக இருந்த 6 அரசு அலுவலர்களுக்கு ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் 'மெமோ' வழங்கிய சம்பவம் அரசு அலுவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அணையை சுற்றுலாத் தலமாக மாற்றுவது என முடிவெடுக்கப்பட்டு அங்கு பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தன. தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் பணிகள் முடியாமல் நீண்டு கொண்டே சென்றது. இதனால் நீர்வளத்துறை செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் இருவரிடமும் விளக்கம் கேட்டு, அவர்களுக்கு மெமோ வழங்க மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

ஆண்டியப்பனூர் அணையை நேரில் ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அங்கு சென்றார்.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், பல்வேறு பணிகள் கிடப்பில் உள்ளதும், மேம்பாட்டு பணிகள் சரிவர மேற்கொள்ளாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, இது குறித்து முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என நீர்வளத்துறை செயற் பொறியாளர் ரமேஷ், உதவி செயற் பொறியாளர் பாலாஜி ஆகியோருக்கு 'மெமோ' வழங்கி ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தர விட்டார்.

அதன் பிறகு, ஆண்டியப்பனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். இது ரூ.23.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதிலும் கட்டுமான பணிகள் மிக தாமாக நடந்து வருவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், உதவி பொறியாளர் தொட்டலாம்பாள், பணி மேற்பார்வையாளர் தாமரைக்கண்ணன் ஆகியோரிடம் விளக்கம்கேட்டு அவர்களுக்கும் ஆட்சியர் அமர்குஷ்வாஹா 'மெமோ' வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூரை அடுத்து மிட்டூரில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதியில் ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவை பரிசோதித்தார். உணவு பட்டியல்படி உணவு வகைகள் தயார் செய்யப்படவில்லை என்பதால் விடுதி காப்பாளர் விஜயகுமாருக்கும் மெமோவை ஆட்சியர் வழங்கினார்.

திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் ஆட்சியர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர், “பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களில் எடையளவு சரியாக இருக்க வேண்டும். பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பொருட்களில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

இவ்வாறாக ஆய்வு செய்ய சென்ற இடத்தில் பணியில் மெத்தனமாக இருந்த 6 அரசு அலுவலர்களுக்கு ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் 'மெமோ' வழங்கிய சம்பவம் அரசு அலுவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com