பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவன் சென்ற ஊர்களும் இடங்களும் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்று தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை வருகின்ற 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சுற்றுலாத்துறை சார்பில் சென்னையில் உள்ள தீவு திடல் மையத்தில் பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பட்டாசு விற்பனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 144 உரிமையாளர்கள் இணைந்து 47 பட்டாசு கடைகளை அமைத்துள்ளனர். இந்த பட்டாசுக் கடைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கூட்டாகத் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
அப்போது அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்ததாவது;
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் 45- க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெற்றுள்ளன.
சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் இந்த முறையும் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது இதை வியாபாரிகளும் பொதுமக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் தற்போது தரமான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாகப் பசுமை பட்டாசு 100% வந்துள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டதற்குபிறகு, தாஜ்மஹாலை விட அதிகளவு சுற்றுலாப் பயணிகள் தற்போது மாமல்லபுரம் வருகிறார்கள்.
அந்த வகையில் இன்னும் அதிக அளவு சுற்றுலாப் பயணிகளைத் தமிழகம் ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
குறிப்பாகப் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவன் சென்ற ஊர்கள் அனைத்தும் விரைவில் அரசு சுற்றுலா தலமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
-இவ்வாறு அவர் தெரிவித்தார்.