‘ஒரே நாடு; ஒரே பாரதம் என்பதற்கு எதிரானது திராவிட மாடல் வாசகம்’ ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்ற சட்டப்பேரவை கூட்டத் தொடர் உரையின்போது பாதியில் வெளியேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த ஆளுநர், தாம் சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறியது குறித்தும், தமிழக அரசின் உடனான தனது அனுபவங்கள் குறித்தும் தனது விளக்கத்தை அளித்து இருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், கோவை கார் குண்டு வெடிப்பு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி கொலை போன்ற பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளைக் கூறிய அவர், ஏற்கெனவே பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்படுவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்ததாகவும், தற்போது இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது என்று தான் எப்படிக் கூற முடியும்?
‘திராவிட மாடல்’ என்ற ஒன்றே கிடையாது. ‘ஒரே நாடு; ஒரே பாரதம்’ என்ற முழக்கத்துக்கு எதிரானது திராவிட மாடல் வாசகம். சுதந்திரப் போராட்டத்தின் மதிப்பை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடல் என்ற வாசகம். இதன் காரணமாகவே, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த சில பகுதிகளை நீக்கிவிட்டு வாசித்ததாகவும், தனது உரைக்குப் பிறகு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக அவையில் காத்திருந்தேன். ஆனால், சபாநாயகருடன் ரகசியமாகப் பேசிய முதலமைச்சர் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாலேயே சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து பாதியில் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிராக, சித்தா பல்கலைக்கழக மசோதா உள்ளது. அதோடு, பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்பதால்தான் அந்த மசோதாவை நிறுத்தி வைத்திருக்கிறேன். மேலும், ஆளுநர் மாளிகையில் நிதி செலவினங்களில் எந்த விதி மீறலும் இல்லை. முதலமைச்சர் மீது தனிப்பட்ட முறையில் தாம் நல்ல மரியாதை வைத்திருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி அந்தப் பேட்டியில் கூறி இருக்கிறார்.