பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி : மீண்டும் பாஜகவை சீண்டிய செந்தில் பாலாஜி

பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி  : மீண்டும் பாஜகவை சீண்டிய செந்தில் பாலாஜி

இம்மாதம் 27ம் தேதி ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. திமுக - அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரச்சார வேலையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியும் வியூகங்கள் அமைத்து தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிஜேபி.யையும், அண்ணாமலையையும் கிடுக்கிப்பிடி கேள்விகளாலும், திணறடிக்கும் சவால்களாலும் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அண்ணாமலையும் இதற்கெல்லாம் கொஞ்சம் கூட அசராமல் பதில் சவால்கள் விட்டும் ‘குடிகார இலாகா அமைச்சர்’ என்றும் ஒருமையில் கடுமையான வார்த்தைகளால் பேட்டி கொடுத்தும் வருவது அனைவருக்கும் தெரிந்த செய்திதான்.

இதற்கொல்லாம் ஒரே காரணம் இருவரும் ஈரோட்டுக்காரர்கள், அதனால் தான் இந்த பொருந்தா ஜாதகம்.

இடைத்தேர்தலுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கு சேகரித்து வருகிறார். வீதி வீதியாக , வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். திமுக கூட்டணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று பல அரசியல் வியூகங்கள் வகுத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஒன்றரை ஆண்டுகால சாதனையால் கை சின்னம் மாபெரும் வெற்றி பெறும். மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பது ஒரு மாயை. அது தவறான கருத்து. இந்த கொங்கு மண்டலம் முதலமைச்சரின் கோட்டை. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் கூட நடத்த முடியாத ஒரு நிலை இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஈரோடு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதும் தவறு. இது திமுகவின் இரும்புக் கோட்டை பொறுத்திருந்து பாருங்கள்." என்று கூறினார்.

பாஜக குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அவங்க கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அவரிடம் கேளுங்கள். பாஜக ஒரு மிஸ்டு கால் பார்ட்டி. பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி. இல்லாத ஒரு நபரை இருப்பதைப் போல் காட்டி அவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். அவர்களை மையப்படுத்தி தேர்தல் நடப்பது போன்ற சூழலை உருவாக்குகின்றனர்” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் பல மடங்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர் மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

“மின்சார கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை பொறுத்திய பின் விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.

விசைத்தறி இந்த பகுதியில் மிக அதிகமாக இருக்கிறது. அதிமுக கடந்த 10 ஆண்டு காலத்தில் மின் கட்டணம் ஏற்றாததை போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றனர். 2010இல் இருந்த மின் கட்டணத்தை விட கூடுதலாக அதிமுக ஆட்சியில் 117 விழுக்காடு உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. விசைத்தறிகளுக்கு அதிமுக ஆட்சியில் 120 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் விரைவில் 1000 யூனிட் ஆக உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு மகத்தான வெற்றியாக இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி அமையும்.

இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com