மின் விநியோகம் பிற்பகலுக்குள் இயல்பு நிலை திரும்பும் செந்தில் பாலாஜி பேச்சு

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மாண்டஸ் புயலினால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்து முடிந்தது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசியதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறின.

இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நமது செய்தியாளருடன் பேசிய அமைச்சர், முன்னெச்சரிக்கைப் பணிகளுக்காக 44,000 மின்கம்பங்கள் மாற்றப்பட்டிருந்தன. நேற்றிரவு நள்ளிரவு வரை மின் விநியோகத்தில் ஏதும் பாதிப்பில்லை என்று தெரிவித்தார்.

புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் அமைந்துள்ள 355 துணை மின் நிலையங்களில் 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே மின் வினியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார் . மேலும் “மின்னகத்தில் மழை காரணமாக 26 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு மட்டும் 16,000 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

“மாண்டஸ் புயலினால் பாதுகாப்பு கருதி மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் களத்திற்கு சென்று ஆய்வு செய்யப்பட்ட பிறகே மின் விநியோகம் விநியோகிக்க படும் . அதுவரை பொதுமக்கள் மின்வாரியத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில் 11,000 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

மாண்டஸ் புயல் கரையைக் கடந்த போது வீசிய பலத்த காற்று மழையில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டது.மதியத்திற்குள் இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலே பாதிப்பு குறைந்துள்ளதாகவும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜிதெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com