பன்னோக்கு மருத்துவமனை மற்றும் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவுக்கு தமிழகம் வரும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு!

பன்னோக்கு மருத்துவமனை மற்றும் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவுக்கு தமிழகம் வரும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு!
Published on

ந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துப் பேசி உள்ளார். அப்போது சென்னை கிண்டியில் அமைந்திருக்கும், 'கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை' திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு ஜனாதிபதிக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சரின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் ஜூன் மாதம் 5ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தர இருக்கிறார். சென்னை வரும் ஜனாதிபதி ஜூன் 5ந் தேதி கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்" என்று அறிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து இந்த கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் ஆறு மேல் தளங்களுடன் 230 கோடி ரூபாய் செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு இருக்கிறது.

தற்போது இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை ஒட்டியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்த விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கிறார் ஜனாதிபதி. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி முர்மு கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com