பொதுத் தேர்வு காலம் ஆரம்பம்... கொரானாவுக்கு முந்தைய நடைமுறையால் பதட்டமாகும் மாணவர்கள்!

பொதுத் தேர்வு காலம் ஆரம்பம்... கொரானாவுக்கு முந்தைய நடைமுறையால் பதட்டமாகும் மாணவர்கள்!

கொரோனாவுக்கு முந்தைய சூழல் முற்றிலுமாக திரும்பி விட்டதாக அரசுகள் நினைக்கின்றன. ஆனால், தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் மாணவர்கள் தயங்குகிறார்கள். சி.பி.எஸ்.ஈ பள்ளிகள், இவ்வாண்டு முதல் பழைய நடைமுறைகளுக்கு மாறியிருக்கின்றன. கொரானாவுக்கு முந்தைய சூழலில் இருந்த தேர்வு நடைமுறைகளை பின்பற்ற இருக்கிறார்கள்.

சி.பி.எஸ்.ஐ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கின்றன. கொரானா பரவல் இருந்த காலங்களில் அனைத்து தேர்வுகளும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு இணையவழியில்தான் இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடப்பாண்டில்தான் முழுமையாக வகுப்பறை கல்வி சாத்தியமானது. தற்போது கொரோனா தொற்று அபாயம் நீங்கியிருப்பதால் பழையபடி ஒரே கட்டத் தேர்வு முறையை சி.பி.எஸ்.ஈ தொடர ஆரம்பித்திருக்கிறது.

தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதத் தயாராகும் அனைத்து மாணவர்களும் பிளஸ் ஒன் வகுப்பை முழுவதும் இணைய வழியில் படித்தவர்கள். இவ்வாண்டு மட்டும்தான் வகுப்பறைகளுக்கு வர ஆரம்பித்தார்கள். சென்ற முறை தேர்வு எழுதியவர்களுக்கு இருந்த சவால்களை விட தற்போதைய மாணவர்களுக்கு சவால் குறைவு என்றாலும் வேறு விதமான சவால்களை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

இணைய வழி கல்வியால் மாணவர்களின் வகுப்பறை அனுபவம் மாறியிருக்கிறது. கவனச்சிதறல் இன்றி பாடங்களை படிப்பது தற்போது சிரமமாகியிருக்கிறது. மாணவர்கள் கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளாக இணையவழியில் படித்துவிட்டு, பத்தாம் வகுப்பை வகுப்பறையில் படிக்க வேண்டியிருந்தால் ஏகப்பட்ட சவால்கள் இருந்தன.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வகுப்புகளை கவனிப்பதுதான் ஆகப் பெரிய கஷ்டம் என்று நிறைய மாணவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் மூன்று மணி நேரம் ஒரிடத்தில் அமர்ந்து தேர்வு எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல. நல்ல ஆரோக்கியமான உடல்நலணும், இரவில் நல்ல உறக்கமும் கொண்ட மாணவர்களால் மட்டுமே தேர்வை சரியாக எதிர்கொள்ள முடியும்

கெரானாவுக்கு பிந்தைய சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூட வகுப்பறை நேரங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்கிறார்கள், கல்வியாளர்கள். முன்பு போல் அனைத்து வகுப்புகளையும் முழுவதுமாக வகுப்பறையில் ஏற்பாடு செய்துவிட முடியாது. அடுத்தடுத்து இரண்டு வகுப்புகளுக்கு நடுவே உடற்பயிற்சி வகுப்புகள், ஓவியக்கலை வகுப்புகள், நூலக நேரம் என ஒதுக்கியாக வேண்டும்.

கொரானாவுக்கு முந்தைய சூழலுக்கு அவசர அவசரமாக திரும்புவதற்கு ஆர்வம் கொண்டிருக்கிறார்களே தவிர, பள்ளி வளாகத்தில் நடைபெற்றுள்ள பல மாற்றங்களை கருத்தில் கொள்ளவில்லை என்கிறார்கள், கல்வியாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com