மக்கள் வசதிக்காக இனி ரேஷன் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதி!
எங்கும் எதிலும் தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. தற்போதைய சூழலில் பெரும்பாலும் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதுமட்டுமின்றி, அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைமுறை இருப்பதால் பலரும் அதன் மூலமே தங்களது தினசரி செலவுகளைச் செய்கின்றனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் கூகுள் பே, போன் பே போன்ற ஆப்கள் உள்ளன. சிறிய தள்ளு வண்டிக் கடைகளில் கூட இந்த செயலிகள் உள்ளன. QR code அட்டையை ஸ்கேன் செய்து அதன் மூலம் பணம் செலுத்தும் முறை வந்துவிட்டது. சிறிய கிராமங்களில் கூட இந்த வசதி இருக்கிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளையும் நவீன டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைக்கு மாற்ற அரசு முடிவு செய்திருக்கிறது. ஏற்கெனவே பணம் செலுத்தி ரேஷன் பொருட்களைப் பெறும் முறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். அதைத் தொடர்ந்து, இனி ரேஷன் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் செயலிகளைப் பயன்படுத்தி பணம் செலுத்திப் பொருட்களைப் பெறும் திட்டத்தை அரசு கொண்டு வர இருக்கிறது.
தற்போது, தமிழக நியாயவிலைக் கடைகளில் சில்லறையாக பணம் கொடுத்தே சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்களை வாங்குகிறோம். இனி, அனைத்து ரேஷன் கடைகளிலும் Google Pay, Phone pay, Paytm மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இந்த வசதி முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூட்டுறவுத்துறை தெரிவித்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து மே மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.