சுவாதி கொலை வழக்கு; குற்றவாளி ராம்குமார் குடும்பத்துக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு?

சுவாதி - ராம்குமார்
சுவாதி - ராம்குமார்

சுவாதி கொலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமாரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மென்பொருள் பொறியாளர் சுவாதியை  ராம்குமார் என்ற இளைஞர் படுகொலை செய்தார். அங்கு அவர் மின்சார  வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டார்.  இந்த விசாரணை முடிவில் நேற்று நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ராம்குமார் சிறையில் இறந்த விவகாரத்தில்,  பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மின்சாரம் பாய்ந்து ராம்குமார் இறந்ததாக டாக்டர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் அவராகவே மின்சாரத்தை தனது உடலில் பாய்ச்சிக் கொண்டு இறந்தாரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

எனவே, ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய, சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ராம்குமாரின் தந்தை பரமசிவத்துக்கு, தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

புழல் சிறையில் கைதிகளைக் கண்காணிக்க, குறைவான எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, ராம்குமார் மரணத்துக்கு சிறைக் காவலர்களை மட்டுமே குறை கூற முடியாது. தமிழக அரசுக்கும் இதில் பொறுப்பு உள்ளது.

சிறையில் போதிய அளவில் ஊழியர்களை நியமிக்க வேண்டியது அரசின் கடமை. மேலும், சிறைக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யப் போதுமான அளவுக்கு அதிகாரிகளை பணியில் அமர்த்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com