பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள், நீண்ட காலமாக வராத ஆசிரியர்களின் விவரங்களை அவசரமாக அனுப்பி வைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல், உடல்நிலையை காரணம் காட்டி மெடிக்கல் லீவ் எடுத்து வருகின்றனர்.
பள்ளிக்கு போனாலும், போகவில்லை என்றாலும் நமக்கு முழு சம்பளம் வந்துவிடும் என்பதால் ஆசிரியர்கள் இதுபோன்ற ஒழுங்கினத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறைக்கு அடிக்கடி புகார் சென்றுள்ளது. ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுப்பதால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்கள் கோரப்படுகிறது.
1. நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள்
2. நீண்ட காலமாக தகவலன்றி பணிக்கு வராதவர்கள்
3. தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள் (அடிக்கடி விடுப்பு எடுப்பவர்கள்).
மேற்காணும் விவரங்களை மிகவும் அவசரம் என கருதி இணையவழி (deesections@gmail.com) மூலம் உடனே அனுப்புமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.