கிராமங்கள் அதிகரித்து வரும் சாதி மத மோதல்களை தடுக்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களை உள்ளடக்கிய சமூக நல்லிணக்க குழுக்களை அமைத்து கிராமங்களின் வளர்ச்சிக்கும், அமைதியை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினுடைய 13 வது மாநில மாநாடு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, மேலும் இவற்றை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தற்போது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் விளைச்சல் குறைவு, நஷ்டம் அதிகரிப்பு, வருமானம் குறைவு என்று பல்வேறு பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும்.
மேலும் விவசாய தொழிலாளர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைத்து விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
பழுதடைந்த, சேதமடைந்த விவசாய தொழிலாளர்களின் வீடுகளை புணரமைக்க நிதி உதவி வழங்க வேண்டும். வீடுகள் இல்லாத விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீடுகள் கட்டுவதற்கு 6 லட்சம் மானியம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு தனி ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். அதற்கான கூலியை 600 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும். மலைவாழ் பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் சத்துணவு தொகுப்புகள் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கான உணவு உரிமை பாதுகாப்பு சட்டம் ஏற்ற வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மக்களின் நலனை கருதி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மாநில தலைவர் ந.பெரியசாமி, செயலாளர் அ.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.