தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகள் மறக்கடிப்பு - ஆர்.என். ரவி. குற்றச்சாட்டு

தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகள் மறக்கடிப்பு   - ஆர்.என். ரவி. குற்றச்சாட்டு

பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள தேசிய கல்லூரியில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் பாரதியாரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாகவும், ராமலிங்க வள்ளலாரின் இருநூறாவது பிறந்த நாள் மற்றும் இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவு தினம் ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாயொட்டி “இந்திய விடுதலைப் போரில் தென்னிந்திய மொழிகளின் பங்கேற்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

 அவர் தமது உரையில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது, இந்திய தேசிய காங்கிரசைச் சுற்றியே அமைந்திருக்கிறது. மகாத்மா காந்தி அதற்கு தலைமை ஏற்று நடத்தினார் என்பதால் அப்படி இருக்கலாம்.

மக்கள் வெகுவாக பங்கேற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில், வெறும் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்றிருக்க முடியாது. அதிலிருந்தவர்கள் மிகப் பெரிய தலைவர்கள், அதில் சந்தேகமில்லை.

ஆனால், மேலும் பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், வேலு நாச்சியார், வீர பாண்டிய கட்டபொம்மன், சிதம்பரம் பிள்ளை, மருது சகோதரர்கள் போன்ற பலர் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் கிடைக்கவில்லை.

மகாத்மா காந்தி அகிம்சை வழியில் சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார். ஆனால், வேறு சிலரால், ஆங்கில ஆட்சியின் கொடுமைகளைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உதாரணமாக, சுபாஷ் சந்திர போஸைப் போன்றவர்கள் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.

சர்தார் உத்தம் சிங், பகத் சிங், சந்திரசேகர ஆஸாத், ராஜ்குரு, சுக்தேவ் போன்ற பலர் இருக்கிறார்கள். அவர்களால் ஆங்கில ஆட்சியை ஏற்க முடியாமல் ஆயுதம் ஏந்தினார்கள். அவர்கள் புரட்சிக்காரர்கள் எனப் புறம்தள்ளினார்கள். இப்போதைய சுதந்திரப் போராட்ட வரலாறு இவர்களுக்கு நியாயம் செய்யவில்லை.

சுதந்திரப் போராட்டம் 1857ல் துவங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், 1806 ஜூலை 10ஆம் தேதி வேலூர் கோட்டையில் நடந்தது என்ன? அதில் பல ஆங்கில வீரர்கள் கொல்லப்பட்டனர். பிரிட்டிஷ்காரர்கள் அதனைக் கலகம் என்று அழைத்தார்கள். அது சுதந்திரப் போராட்டம் இல்லையா? இதுபோல பல இருக்கிறது.

1802ல் பாளையங்கோட்டையில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் எங்கே வருவார்கள்? அவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று அழைக்கிறோமா, இல்லை மறந்துவிட்டோமா?

புகழப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை நரேந்திர மோதி அரசு ஆவணப்படுத்த ஆரம்பித்தபோதுதான், சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களின் பெயர் வெளியில் வந்தது. அதுவரை அவர், விளிம்பு நிலையில் இருந்தார்.

நான் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தபோது, அதில் 30 பேர்தான் இருந்தார்கள். அப்படியானால், வேலூர் கோட்டையில் இறந்தவர்கள் யார்? என்று ஆளுநர் ஆர்.என். ரவி நீண்ட உரையாற்றினார்.

ஆளுநர் ஆர்.என். ரவியின் கூற்றுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான கோபண்ணா.

"இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியது காங்கிரஸ்தான். 1857க்குப் பிறகு, ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை கையாளக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. திலகர், கோபாலகிருஷ்ண கோகலேவுக்குப் பிறகு, காந்தி தலைமை ஏற்றார். அகிம்சை வழியில் போராடிய போராட்டம்தான் இந்தியாவின் விடுதலைக்கு முக்கியக் காரணமாக இருந்தது. காந்தியின் அகிம்சையும் சத்தியாகிரகமும் பெற்றுத்தந்தது.

விடுதலைப் போராட்டத்தில் இன்றைய பா.ஜ.கவின் முன்னோர்களான இந்து மகா சபையோ, ஆர்.எஸ்.எஸ்-சோ கடுகளவு பங்களிப்பையும் அளித்ததில்லை. சாவர்க்கர், மன்னிப்புக் கடிதம் எழுதி விடுதலை ஆனார். ஜவஹர்லால் 3259 நாட்கள் எந்தெந்த சிறையில் இருந்தார் என்பதை காங்கிரஸ்காரர்களால் சொல்ல முடியும். இன்றைய பா.ஜ.க. தலைவர்களோ, தீனதயாள் உபாத்யாயாவோ, ஜனசங்க தலைவர்களோ சிறையில் இருந்ததற்கு ஆதாரம் உண்டா?

காங்கிரஸ் தவிர, “இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரியார், ஜீவா போன்றோரும் பங்கேற்றார்கள். இடதுசாரித் தலைவர்களும் பங்கேற்றனர். சுதந்திரப் போராட்டம் என்று நீங்கள் சொன்னால், நேரு, காந்தி, அபுல்கலாம் ஆசாத் என்ற பெயர்கள்தான் நினைவுக்கு வரும். ஜனா கிருஷ்ணமூர்த்தி நினைவுக்கு வரமாட்டார். அதனால்தான் சாவர்க்கருக்கோ, கோல்வால்கருக்கோ இவர்களால் சிலை வைக்க முடியாமல் காங்கிரசை சேர்ந்த வல்லபபாய் படேலுக்கு சிலை வைக்கிறார்கள்” என்று ஆளுநர் ரவிக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார் கோபண்ணா.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சுக்கள் எப்போதும் சர்ச்சையாக்கப்படும். அதேபோல்தான் இப்போதும் பெரும் சர்ச்சை எழுந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com