மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக பதவிவகித்த கருணாநிதி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி, தனது 95-வது வயதில் காலமானார்.
அவரது 5-ஆம் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை பகுதியிலிருந்து இன்று காலை 8 மணியளவில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கலைவாணர் அரங்கம் வழியாக செல்லும் இந்தப் பேரணியின் இறுதியில், மெரினா அருகே உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.