ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் போன உயிருக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என திராவிட கழகத் தலைவர் வீரமணி பேசியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கும் தமிழக ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிட கழகத் தலைவர் வீரமணி, ஆன்லைன் விளையாட்டு குறித்த கேள்விகளை எழுப்பிய பின் விளக்கங்களை 24 மணி நேரத்திற்குள் அனுப்பிய பின்னும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அண்ணாமலைக்கும் திறந்திருக்கும் ஆளுநர் மாளிகை தமிழக அரசு சார்பில் அனுமதி கேட்ட சட்டத்துறை அமைச்சருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை என பேசினார்.`
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு இடங்களிலிருந்து தொடர்ந்து வேண்டுகோள்களும், புகார்களும் வந்த வண்ணம் உள்ளது. இதனால் பொது மக்களிடையே கருத்தும் கேட்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்வதற்கான சட்ட மசோதா, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அவசர சட்டம் நிறைவேற்றப் பட்டு ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்தின் காலம் நவம்பர் 27 ஆம் தேதியுடன் காலாவதியாகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.